குடியிருக்க வீடு கேட்டு 95 வயதான சுதந்திரப்போராட்ட தியாகி திடீர் உண்ணாவிரதம்!
திருச்சி மாவட்டம், மணப்பாறை சேதுரெத்தினபுரத்தில் வசித்து வருபவர் சுந்தரம். 95 வயதான இவர் சுதந்திர பேராட்டத்தில் பங்கேற்றவர். இவருக்கு தமிழக அரசின் சுதந்திர போராட்ட தியாகிக்கான பென்சன் வழங்கப்பட்டு வரும் சூழ்நிலையில் தனது ஓட்டு வீடு பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் வீடும், வேலையின்றி இருக்கும் மகனுக்கு அரசு வேலையும் வழங்கக்கோரி
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் திருச்சிக்கு வருகைதந்த போது தமிழக முதல்வரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை தனது மனுவை பரிசீலனை செய்து கோரிக்கைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து இன்று காலை மணப்பாறை காமராஜர் சிலை அருகில் கையில் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும்,

தேசியக் கொடியையும் கையில் ஏந்தியபடி உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி சுந்தரத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். சுதந்திரப் போராட்ட தியாகி திடீர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.