வழிபாடு முறை பற்றி அவதூறு; மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார்
திருச்சி புத்தூர் ஹைரோட்டில் உள்ள சண்முக திருமண மண்டப மேலாளர் மணிகண்டன்(37). இவர் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் உள்ள மெய்வழிச்சாலை உறுப்பினராக உள்ளார். இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார். அதில் எங்களது வழிபாடு முறை பற்றி அவதூறாகவும், கேலி செய்தும் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதை பதிவிட்டவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
அதன்படி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உறையூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்தார். சமூக வலைத்தளத்தில் அவதூறாக பதிவிட்ட சென்னை புத்தாகரம் அன்னை இந்திராகாந்தி நகரை சேர்ந்த சிவயோகி என்கிற சிவக்குமார் என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.