மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மை பணியாளர் பணியிடங்களை தொகுப்பூதியம் ரூ.3 ஆயிரம் அடிப்படையில் ஆண் 12 பேர், பெண் 15 பேர் என முன்னுரிமை பெற்றவர்கள் மற்றும் முன்னுரிமை அற்றவர்கள் என்ற அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணியிடங்கள் நேர்காணல் மூலம் இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்படும். விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத, படிக்க
தெரிந்திருக்கவேண்டும். வயது வரம்பு வரும் ஜூலை மாதம் 1-ந் தேதி எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் 18 முதல் 35 வயதும், பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., மற்றும் டி.என்.சி., பிரிவினர் 18 முதல் 32 வயதும், இதரபிரிவினர் 18 முதல் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்ப படிவத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-ம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று, அதனை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் வரும் 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது என்று மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.