உலக லெவல் கிராசிங் தினத்தை முன்னிட்டு ரயில்வே போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலகம் முழுவதும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி லெவல் கிராசிங் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி பொன்மலை அருகே உள்ள மஞ்சத்திடல் ரயில்வே கேட் பகுதியில் பொன்மலை தெற்கு ரயில்வே போலீசார் சார்பில் உதவி கோட்ட ஆணையர் சின்னத்துரை தலைமையில் ரயில்வே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர் . ரயில்வே கேட்டினை அணுகும் பொழுது கேட் சாலை போக்குவரத்திற்கு திறந்து இருக்கும் பொழுது தடையில்லாமல் கேட்டை கடந்து செல்ல வேண்டும். சாலை போக்குவரத்திற்கு எதிராக கேட் மூடி இருக்கும் பொழுது நின்று தொடர்வண்டி சென்ற பிறகு பாதுகாப்பாக லெவல் கிராசிங் கேட்டை கடந்து செல்லவேண்டும். மூடியிருக்கும் கேட்டை திறக்கவோ, சேதப்படுத்தவோ முயற்சிக்க வேண்டாம். லெவல் கிராசிங் கேட் உங்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ளது அதனை சரியாக உபயோகப்படுத்தி விபத்தில்லா பயணத்தை உறுதி செய்ய வேண்டும். எச்சரிக்கை பலகை முன் வாகனங்களை நிறுத்த வேண்டும். ரயில் வரவில்லை என்பதை இருபுறம் பார்த்து உறுதி செய்ய வேண்டும். ரயில் வண்டியின் ஒளியினை கவனித்து கடக்கவேண்டும். லெவல் கிராசிங் கேட்டினை கடக்கும்போது கைப்பேசி மற்றும் இயர்போன் பயன்படுத்த வேண்டாம் என்ற பல விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் பொதுமக்களுக்கும் வழங்கினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொன்மலை இரயில்வே உதவி இன்ஸ்பெக்டர் சரவணகுமார் துணை உதவி இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் ரயில்வே போலீசார் பலர் கலந்து கொண்டனர்
