வரி – வரியில்லா இனங்களின் நிலுவைகளை வசூலிக்க கலந்தாலோசனைக் கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் தலைமையில் வரி மற்றும் வரியில்லா இனங்களின் நிலுவைகளை வசூலிக்க கலந்தாலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் கூட்டரங்கில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் தலைமையில், திரு.மரு.இரா.வைத்திநாதன். முன்னிலையில், மாநகராட்சி துணை ஆணையர், உதவி ஆணையர்கள், உதவி வருவாய் அலுவலர்களுடன் நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்களின் நிலுவைகளை வசூலிக்க கலந்தாலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மேயர் அவர்கள் தெரிவித்ததாவாது, 31.03.2022முடிய உள்ள வரி நிலுவைகளில் சொத்துவரியில் ரூ.22.81 கோடியும், குடிநீர் கட்டணம் ரூ.26.76 கோடியும், காலிமனை வரி ரூ.9.31 கோடியும், தொழில் வரி ரூ.7.53 கோடியும் மற்றும் மாநகராட்சி கடைவாடகை ரு.7.48 கோடியும், புதைவடிகால் சேவைக்கட்டணம் ரூ.15.41 கோடியும் ஆகமொத்தம் ரு.89.31 கோடி நிலுவையாக உள்ளது. இதனை வசூலிக்க அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
தற்போது நமது மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. எனவே பொதுமக்கள் தானாகவே முன்வந்து மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரி நிலுவைகளை உடன் செலுத்தி மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாண்புமிகு மேயர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.