பி.கே. அகரம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பி கே அகரத்தில் ஊராட்சிக்கு சொந்தமான ஏரியில் அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் விஷத்தை கலந்ததால் மீன்கள் செத்து மிதக்கும் அவல நிலை.
பி கே அகரம் ஊராட்சியில் ஊராட்சிக்கு சொந்தமான ஏரி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பெருவளப்பூர் சாலையில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரால் வரத்து வாய்க்கால் மூலம் தண்ணீர் வந்து ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்கும். இப்பகுதியில் உள்ள ஆடு மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும்போது இந்த ஏரியில் தண்ணீர் குடிப்பது வழக்கம். மேலும் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பல்வேறு பயன்பாட்டிற்கு இந்த ஏரியை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஏரியில் அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் யாரோ விஷத்தை கலந்து விட்டனர். இதனால் ஏரியில் உள்ள மீன்கள் குவியல் குவியலாக செத்து மிதக்கின்றது. எனவே குளத்தில் விஷத்தை கலந்த சமூக விரோதிகளை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.