“எதிர்ப்பும் ஆதரவும்” – திருச்சி மாநகராட்சியுடன் இணையவுள்ள 25 ஊராட்சி பகுதிகள் – முதற்கட்ட பணிகள் தொடக்கம்!
தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் கே.என் நேரு புதிதாக 10 மாநகராட்சிகளிலும் அறிவித்தார்.

தொடர்ந்து திருச்சி மாவட்டத்திற்கு பல்வேறு புதிய புதிய அறிவிப்புகளையும், அதற்கான பணிகளையும் செய்து வருகின்றார். ஒன்றிய பேருந்து நிலையம், புதிய விமான நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சத்திரம் பேருந்து நிலையம் பாதாள சாக்கடை திட்ட பணிகள், புதிய காவிரி பாலம், உயர்மட்ட பாலம் என அடுத்தடுத்து திருச்சிக்கு பல்வேறு திட்டங்கள் அறிமுகமாக உள்ள நிலையில் தற்போது ஊராட்சிகளாக இருக்கும் பல பகுதிகள் மாநகராட்சியுடன் இணைய உள்ளனர். இதன் மூலம் திருச்சியில் தற்போது 65 வார்டுகள் இருக்கும் நிலையில் 100 வார்டுகளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்புகள் ஒருபுறமும் ஆதரவு ஒருபுறமும் கிளம்பியிருக்கிறது. மாநகராட்சியுடன் இணைப்பதால் கிராமப்புறங்களில் 100 நாள் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயமும், பல சலுகைகள் ரத்தாக உள்ளதாக தொடர்ந்து பல நாட்களாகவே திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில் திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ள ஊராட்சிகளின் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் இணைப்புக்குறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். அதற்கான அதிகாரப்பூர்வமான மாநகராட்சியுடன் இணைக்கப்படும் ஊராட்சிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திருச்சியை சேர்ந்த,
அந்தநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மல்லியம்பத்து, மருதாண்டாகுறிச்சி, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர்
மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட முடிகண்டம், மேக்குடி, கே.கள்ளிக்குடி, தாயனூர், நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, நாகமங்கலம், புங்கனூர்
திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையக்குறிச்சி, குண்டூர், நவல்பட்டு, சோழமாதேவி, கீழக்குறிச்சி
லால்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாளக்குடி, மடக்கொடி, அப்பாதுறை, எசனைக்கோரை, புதுக்குடி
மண்ணச்சநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதவபெருமாள் கோவில், பிச்சாண்டார் கோவில், கூத்தூர்
ஆகிய 25 ஊராட்சிகளையும், திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கலாம் என தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து 25 ஊராட்சிகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்க அரசு முடிவு செய்தது. இதில் முதற்கட்டமாக, மாநகராட்சியுடனான இணைப்புக்குறித்து, மாவட்ட ஆட்சியர் ஊராட்சிமன்ற தலைவர்களுடன் கருத்து கேட்ட நிலையில் தற்போது முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA