ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் தம்பி கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் புரவி நகரில்
தம்பி பீர்பாட்டிலால் அண்ணனை குத்தியதில் படுகாயம்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. தம்பி கைது.
நொச்சியம் புரவிநகரைச
சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன்கள் ஹரிராஜன் ( 44), அசோக்குமார் (40), சரவணன் (38).இதில் அசோக்குமார் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். கிரேன் ஆப்பரேட்டரான
சரவணன் புரவிநகரில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
ஆட்டோ டிரைவரான ஹரிராஜன் மனைவி மற்றும் குழந்தை என குடும்பத்துடன் திருச்சி குட்ஷெட் ரோட்டில் உள்ள அகிலன் தெருவில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 17-ந் தேதி புரவி நகருக்கு சென்ற ஹரிராஜன், தனது பெற்றோரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த சரவணன், ஏன் அடிக்கடி வந்து பெற்றோரிடம் பணம் கேட்கிறாய் என்று ஹரிராஜனை கண்டித்துள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சரவணன், ஹரிராஜனை பீர் பாட்டிலால் வயிறு மற்றும் தோள்பட்டையில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஹரிராஜனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஹரிராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வந்த நிலையில் அவரை கைது செய்தனர். பின்னர் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ல் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.