கார்கில் வெற்றி தினம் : மேஜர் சரவணன் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை
திருச்சி, ஜூலை 26 கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி திருச்சியிலுள்ள மேஜர் சரவணன் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கடந்த 1999 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்முர் மாநிலத்தின் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி அதனை ஆக்கிரமித்தது. இதையடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய மலைத்தொடரில் போர் நடைபெற்றது. இறுதியாக ஜூலை 26 ஆம் தேதி கார்கில் பகுதியை இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் கார்கில் வெற்றி தினம் ஜூலை 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி கார்கில் வெற்றி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கார்கில் போரில் வீரமரணமடைந்த திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வெஸ்டரி பள்ளி ரவுண்டாவிலுள்ள மேஜர் சரவணன் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர் துரைமுருகன், ஆ.ராசா, கே.என்.நேரு, அன்பில்மகேஸ்பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.