குவார்ட்ருக்கு கூடுதலாக ரூ.10 வசூல் : டாஸ்மார்க் கடைக்குப் பூட்டு போட்ட குடிமகன்!
மணப்பாறை அருகே டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூல். குடிபோதையில் கடைக்கு பூட்டுபோட்ட மதுப்பிரியரால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தவளைவீரன்பட்டியில் டாஸ்மாக் கடை (கடை எண்.10567) செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு இன்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த நல்லுச்சாமி (45) என்பவர் மது பாட்டில் வாங்கச் சென்றுள்ளார். அப்போது கடையின் விற்பனையாளர் முத்துச்சாமி என்பவர் குவாட்டர் பாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் அதிகமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. வாங்கிய குவாட்டரை குடித்த நல்லுச்சாமி போதை தலைக்கேறியதும் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலித்ததைக் கண்டித்து ஒரு பூட்டை எடுத்துவந்து கடை விற்பனையாளர் உள்ளே இருந்த நிலையில் அவரை உள்ளேயே வைத்து கடையின் இரும்பு கேட்டிற்கு பூட்டு போட்டுள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிறிது நேரத்தில் நல்லுச்சாமியிடம் இருந்து சாவியை பிடுங்கி பூட்டை திறந்துவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கடைக்கு பூட்டு போட்ட நல்லுச்சாமியை விசாரணை செய்து வருகின்றனர். குவாட்டருக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலித்ததைக் கண்டித்து குடிபோதையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.