கட்டண உயர்வைக் கண்டித்து சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற தேமுதிகவினர் கைது
திருச்சி, செப்.9 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னம்பலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிகவின் சார்பில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறு சுங்கச்சாவடியை முற்றுகையிடுதற்காக சுங்கச்சாவடியை நோக்கிச் சென்ற தேமுதிகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பிய தேமுதிகவினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் மாவட்ட துணைச்செயலாளர் தொப்பம்பட்டி சரவணன், மாவட்ட அவைத்தலைவர் அர்ஜுனண், மாவட்ட பொருளாளர் வசந்தபெரியசாமி மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்டவர்கள் வையம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர.
தேமுதிகவினரின் போராட்டத்தை முன்னிட்டு சுங்கச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.