எல்லையம்மன் கோவில் மகாநோன்பு விழாவில் வேடபரி நிகழ்ச்சி

0 401
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பின்னத்தூரில் உள்ள எல்லையம்மன் கோவிலில் மகாநோன்பு திருவிழா இன்று அதிகாலை நடைபெற்றது. மிகவும் பழைமை வாய்ந்த இக்கோவிலில் ஆயுதபூஜைக்கு அடுத்தநாளான விஜயதசமியன்று அதிகாலை மகா நோன்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இன்று அதிகாலை திருவிழா நடைபெற்றது. வீரபத்திரசுவாமிக்கு நடைபெற்ற இந்த வேடபரி திருவிழாவில் பரசுராமர், பரதராமர், எல்லையம்மன், போலாயி அம்மன், வீரபத்திர சுவாமி, லாடசன்னாசி, பைரவர் முதலான தெய்வங்கள் ஒவ்வொன்றும் குதிரை, அன்னம், சிறிய தேர் என தனித்தனி வாகனங்களில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் எல்லையம்மன் கோவிலில் இருந்து பொட்டல்மேடு வழியாகச் வாணவேடிக்கைகளுடன் சென்று காவிபுளி என்ற இடத்தில் ஆட்டுக்குட்டி பலியிட்டு சுவாமிக்கு எரிசோறு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து சுவாமிகள் கோவிலை நோக்கி வரும்வழியில் பொட்டல்மேடு பகுதியில் இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் சுவாமிகள் எழுந்தருளிய தேர் மற்றும் அன்னம், குதிரை உள்ளிட்ட வாகனங்களை தோளில் சுமந்து கொண்டு முன்னும் பின்னுமாக ஓடினர். இந்த வேடபரி நிகழ்வில் சுவாமிகளின் வாகனங்கள் மின்னொளியில் ஜொலித்தது. ஒரு வாகனத்திற்கு ஒரு கிராமத்தினர் என பெருமாம்பட்டி, வெள்ளையம்மாபட்டி, தாதமலைப்பட்டி, பலவாரப்பட்டி ஆகிய நானகு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சுவாமிகளின் குதிரை, அன்னம், தேர் உள்ளிட்ட வாகனங்களை தோளில் சுமந்து கொண்டு ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு ஓடிய வேடபரி நிகழ்வு பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது. ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த வேடபரி நிகழ்வில் மணப்பாறை சுற்றுப்புற பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.