அரசு பள்ளி ஆசிரியர்கள் இஸ்ரோ பயணம்
திருச்சி மாவட்டத்தில் இருந்து அரசு பள்ளி ஆசிரியர்கள் இஸ்ரோ பயணம் –
வான் அறிவியல் விழிப்புணர்வு பயிற்சி பெற்றனர்.
திருச்சி, ஜன. 5 திருச்சி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு பள்ளி ஆசிரியர்கள் டார்வின் அறிவியல் மன்றம் சார்பாக இஸ்ரோ பயணம் சென்றனர்.
பெங்களூரில் இயங்கி வரும் இஸ்ரோ மையத்திற்கு சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் டார்வின் அறிவியல் மன்றத்தின் சார்பில் வான் அறிவியல் விழிப்புணர்வு பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
முதல்முறையாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு டார்வின் மையத்தின் சார்பாக இஸ்ரோ பயணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இஸ்ரோ மையத்தை பார்வையிட்டு வான் சார்ந்த அறிவினை பெற ஏராளமான அரசு பள்ளி ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதில் முதற்கட்டமாக 350 பேர் தேர்வு செய்யப்பட்டு இஸ்ரோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இரண்டாம் கட்டமாக 175 ஆசிரியர்களும், மூன்றாம் கட்டமாக 175 ஆசிரியர்கள் என பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திருச்சி மாவட்டத்தில் இருந்து தண்டலை ஆசிரியர் தனலட்சுமி, ஆமரத்சூர் ஜான்சி ராணி, இடையபட்டி ஜெயகிருஷ்ணன், மற்றும் பூலாங்குடி சித்ராதேவி,கண்ணுடையான்பட்டி பாண்டியன் உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் 5 பேரும் இஸ்ரோ அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு செயற்கைக்கோள் தயாரிக்கும் இடங்களை நேரில் பார்வையிட்டனர்.
பின்னர் வான் அறிவியல் சார்ந்த பல்வேறு சந்தேகங்களை அங்கிருந்த வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெளிவு படுத்தினர்.
மேலும் செயற்கைக்கோள் தயாரிக்கும் முறைகள், அதற்கான தளவாடப் பொருட்கள் பெறுவது, செயற்கைக்கோளின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு வான் அறிவியல் சார்ந்த விளக்கங்களை வானிலை ஆராய்ச்சியாளர்கள் மாலதி மற்றும் ராவ் ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். இதுகுறித்து டார்வின் அறிவியல் மன்ற நிர்வாகி கூறும்போது அரசு பள்ளி மாணவர்கள் இதுபோன்ற ஆராய்ச்சி துறைகளை பார்வையிட அரசு சார்பில் அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது ஆராய்ச்சி செய்யும் இடங்களில் பணிபுரிய எந்த மாதிரியான படிப்புகளை படிக்க வேண்டும் என மாணவர்கள் அறிந்து கொள்ள இயலும். அதன் வழியே நாம் தலைசிறந்த வின்வெளி அறிவியல் விஞ்ஞானிகளை பெற இயலும் என்று கூறினார்.திருச்சி சேலம் திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அரசு பள்ளி ஆசிரியர்கள் இஸ்ரோ பயணத்தில் கலந்து கொண்டனர்.