பிரதமரை விமர்சிக்கும் சங்கராச்சாரியர்களை இந்துமத விரோதி என்று அறிவிக்க முடியுமா? கி.வீரமணி கேள்வி
திருச்சி, ஜன.12 திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அயோத்தியில் ராமர் கோயில் முழுமையாக கட்டி முடிக்கவில்லை அதற்குள் அதை திறப்பதற்கு பிரதமருக்கு என்ன அவசரம் என்றும் அக்கோவிலில் ராமர் சிலையை வைக்க பிரதமருக்கு என்ன அருகதை இருக்கிறது என்று நான்கு சங்கராச்சாரியார்கள் கேட்கிறார்கள். இதைக் கேட்ட நான்கு சங்கராச்சாரியார்களையும் இந்துமத விரோதிகள் என்று பிஜேபிக்காரர்கள் சொல்வார்களா? முடிந்தால் அறிவித்து பாருங்கள். நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக ராமனையே பி.ஜே.பி நிறுத்துகிறது என்று கூறினார்.
இந்திய கூட்டணி என்பது ஆண்டிகள் கட்டிய மடம் என ஓ.பி.எஸ் விமர்சித்து உள்ளார் என்ற கேள்விக்கு, ஆண்டிகளுக்காவது மடம் இருக்கிறது. ஆனால் இவருக்கு எங்கே போவது என்று இடம் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார் என்றார். உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் அவருக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது. எனவே துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முடிவு செய்வார் என்று கூறினார்.