உயிர்பெற்றது மொழிப்போர் தியாகிகள் கல்வெட்டுகள் – சீரமைத்த திருச்சி மாநகராட்சி
விடுதலைப் போராட்டத்துக்கு முன்னரே தொடங்கியது தான் இந்த மொழிப்போர் போராட்டம். இதற்கான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய பெருமை தமிழினத்தையே சாரும். ஒவ்வொரு ஆண்டும் மொழிப்போர் தியாகிகள் தினம் ஜனவரி 25ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் 1960-களில்தான் உச்சத்தை எட்டினாலும், 1930-களிலேயே தொடங்கிவிட்டது.1965-ல் இந்திய ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்று, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தலைமையிலான காங்கிரஸ் அரசின் அறிவிப்பால், மீண்டும் போராட்டம் உருவானது. அண்ணா தலைமையில் தி.மு.க.வின் போராட்டம் உக்கிமானது. இதில், தீக்குளித்தும், குண்டடிப்பட்டும் மாணவர்கள், இளைஞர்கள் பலர் உயிரைவிட்டனர்.
சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி சின்னசாமி, சண்முகம் என இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்களது உயிரை நீத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2006ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலை துறை சார்பாக மொழிப்போர் தியாகிகள் சின்னசாமி, சண்முகம் ஆகியோரின் நினைவாக தற்போதைய பாலக்கரை பாலம் கட்டப்பட்டது. இதனை மு கருணாநிதி திறந்து வைத்தார்.
இதனுடைய நினைவாக பாலத்தின் மையப்பகுதியில் கல்வெட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது. அடுத்த பல வருடங்களில் அப்பாலத்தில் உள்ள கல்வெட்டு சிதிலமடைந்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்பட்டு வந்தது. இதுகுறித்து இரண்டு வருடங்களுக்கு முன்பும், பலமுறையும் மாநகராட்சியிடம் முறையிட்ட போதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை!
ஆனால் தற்போது மாநகராட்சி சார்பாக கல்வெட்டுக்கள் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
