கஞ்சா கடத்திய வழக்கில் இளைஞருக்கு 20ஆண்டுகள் சிறை தண்டனை
திருச்சி, மே 10 காரில் கஞ்சா கடத்திய வழக்கில் இளைஞருக்கு 20ஆண்டுகள் சிறை மற்றும் இரண்டு லட்சம் அபராதம், மேலும் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிப்பு
கடந்த 23.03.2022-ம் தேதி திருச்சி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலிசாருக்கு ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்துக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல் பிளாசா அருகில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்துக்கு சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அந்த காரில் கடத்தி வரப்பட்ட 22 கிலோ, கஞ்சாவை பறிமுதல் செய்து தேனி மாவட்டம் தேவாரம் மூனாண்டிபட்டியை சேர்ந்த ஆசை (வயது-38) புவனேஸ்வரன் (வயது -34) குமார் (வயது-49) மற்றும் கார்த்தி ஆகியவரை கைது செய்து திருச்சி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு குற்ற எண்:3/2022,U/S 8(C) r/w 20(b) (ii) (C) 25,29(1) NDPS ACT 1985-ம் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் நான்கு பேர் மீதும் கடந்த 12.09.2022-ம் தேதி அன்று புலன் விசாரணை அதிகாரி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு திருச்சி என்பவரால் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ் வழக்கானது புதுக்கோட்டை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதி மன்றத்தில் நடைப்பெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி நேற்று 09.05.2024 தீர்ப்பளித்தார்.
அதில் குற்றம் சாட்டப்பட்ட புவனேஸ்வரனுக்கு போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறையும், மேலும் போதைப் பொருள் கடத்த காரை பயன்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். ஆசை மற்றும் குமார் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தும் கார்த்தி என்பவரை இவ் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார். மேற்படி வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஆஜரானார்.