ரெட்டமலை கோவிலில் ஐம்பொன் சிலை எடுத்து சிறப்பு பூஜை
திருச்சி, ஜூலை 17 திருச்சி பிராட்டியூர் இரட்டைமலை ஸ்ரீ ஒண்டிக்கருப்பு சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத தொடக்கத்தை முன்னிட்டு கோயில் பூசாரிகள், நவல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விரதமிருந்து இரட்டைமலைக்கு மேலே சுரங்கத்தில் உள்ள ஐம்பொன் சிலைகளை வெளியே எடுத்து பூஜை செய்வது வழக்கம். அதன்படி, நிகழாண்டு ஆடி மாத பிறப்பை முன்னிட்டு 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரட்டைமலை சுரங்கத்தில் இருந்து சுவாமி சிலைகளை வெளியே எடுக்கும் வைபவம் நடந்தது இதில், விரதமிருந்த கோயில் பூசாரிகள், நவல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுரங்கத்தின் பூட்டைத் திறந்து, ஐம்பொன் சிலைகளான யானை, குதிரை, ஐயனார், பெண் தெய்வங்கள், சுவாமி சிலைகள், குத்துவிளக்கு போன்ற பல சிதிலமடைந்த கோயில் பொருள்களை வெளியே எடுத்து, தூய்மைப்படுத்தி பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, சிலைகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.