திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் துரை வைகோ எம்.பி. பேட்டி

0 270
Stalin trichy visit

திருச்சி, ஆக.19 திருச்சி விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விடவாவது ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்று திருச்சி எம்.பி துரைவைகோ கூறினார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி எம்.பி துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், விமான நிலைய இயக்குநர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் திருச்சி விமான நிலைய ஓடுதள பாதை விரிவாக்கம் குறித்தும், பயணிகளுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டப்பட்டு விட்டது. ஆனால் ஓடுதள பாதை இன்னும் விரிவுப்படுத்தப்படவில்லை ஓடுதள பாதையை விரிவுப்படுத்தினால் தான் கூடுதல் விமானங்கள் இயக்கப்பட முடியும், பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே ஓடுதள பாதைக்கான நிலத்தை கையகப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. விமான நிலைய புதிய முனையத்தில் விமான பயணிகளுடன் வருபவர்கள் பயன்படுத்த கழிவறை வசதி போதுமான வகையில் இல்லை. அதை அமைத்து தர வேண்டும் என்பது குறித்தும் கூறினேன். இந்தியாவில் உள்ள எந்த விமான நிலையத்திலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆட்டோக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே பயணிகள் மற்றும் பயணிகளுடன் வருபவர்களின் வசதிக்காக தற்பொழுது பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இன்று மூன்று அரசு பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப அதன் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும். திருச்சி விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விடவாவது ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன் இது குறித்து பரிசீலிப்பதாக விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.