கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
திருச்சி, ஆக. 19 திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள பெரிய அணைக்கரைப்பட்டி மணியாரம்பட்டியைச்சேர்ந்தவர் ரெங்கசாமி மனைவி பிச்சையம்மாள் (60) .இவரது கணவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளதாலும் முதல் மனைவியான பிச்சையம்மாளுக்கு குழந்தைகள் இல்லாததாலும் இவர் அருகில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார்.
மேலும் வயது முதிர்வின் காரணமாக ஊன்றுகோல் உதவியுடன் நடப்பவர். இந்த நிலையில் நேற்று காலை அவரது கணவர் வீட்டில் சென்று பார்த்தபோது பிச்சையம்மாளை காணவில்லை என்பதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தேடி பார்த்த போது வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் தவறு விழுந்துள்ளது தெரிய வந்தது. உடனடியாக கிணற்றில் இறங்கி பார்த்த பொழுது அவர் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதனை அடுத்து வையம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பெயரில் வையம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கிணற்றில் இருந்த மூதாட்டியின் உடலை மேலே கொண்டுவந்து உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு உடற்கூறு ஆய்வு முடிக்கப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.