கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
திருச்சி, செப். 17 திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 13.09.2024-ம் தேதி மாலை 5.00 மணியளவில் திருச்சி சென்னை – தேசிய நெடுஞ்சாலையில், இருங்களூர் கைகாட்டி அருகில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சாலையில் பட்டாசுகளை வைத்தும், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சாலையை முழுவதுமாக அடைத்து வாகனங்களை ஓட்டியும், கூச்சலிட்டும் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண். 94874 64651-ற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு சமயபுரம் காவல் நிலைய குற்ற எண். 192/24 ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து தக்க அறிவுரை வழங்கவும், கல்லூரி நிர்வாகத்துடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கல்லூரி நிர்வாகம், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சில மாணவர்களை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே, இது போன்று பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக கல்லூரி மாணவர்கள் செயல்படும் பட்சத்தில், அவர்கள் மீது காவல்துறையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.