மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
திருச்சி, ஏப். 27 மணப்பாறையில் புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா கோலாகலம். பல்லாயிரக்கணக்கானோர் பூந்தட்டுகளை ஏந்தி வந்து அம்மனுக்கு பூக்களை செலுத்தி வழிபாடு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமர்ச்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் சித்திரைத் திருவிழா இன்று பூச்சொரிதழ் விழாவுடன் துவங்கியுள்ளது.
பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு நேற்று காலை கோவில் விநாயகர் வழிபாடு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்விக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. கோவில் பரம்பரை அறங்காவலர் வீரமணி அம்மனுக்கு பூச்சாட்டியதைத் தொடர்ந்து மணப்பாறை நகர மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பூத்தட்டுகளுடன் தப்பாட்டம், செண்டை மேளம் முழங்க சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் ஆட்டம், பாட்டத்துடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நீண்ட வரிசையில் நின்று மாலை முதல் நள்ளிரவு வரை அம்மனுக்கு பூக்களை படைத்து வழிபாடு நடத்தினர். இதைத் தொடர்ந்து மணப்பாறை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் ரதங்கள் அனைத்தும் முனியப்பன் கோவிலை வந்தடைந்து.
பின்னர் அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மாரியம்மன் கோவிலை அடைந்ததும் அம்மனுக்கு பூ போட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனின் உருவம் தாங்கிய ரதங்களின் அணிவகுப்பு அனைவரையும் ஈர்த்தது. இந்த வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும் ரதங்கள் செல்லும் பகுதிகளில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என பூச்சொரிதல் விழா களை கட்டியது.
பூச்சொரிதல் விழாவினைத் தொடர்ந்து வருகிற மே 1ம் தேதி, காப்புகட்டுதல் விழாவும், முக்கிய விழாக்கலான பால்குட விழா மே 17ம் தேதியும், வேடபரி விழா 18 ம் தேதியும் நடைபெறுகிறது.