சமுதாய வளைகாப்பு: அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு
திருச்சி, பிப்.24 திருச்சியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி வாழ்த்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தும் விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் சமுதாய வளைகாப்பு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு மங்கலப் பொருட்களான வளையல், மங்கலநாண், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூ, பழங்கள், வேப்பம் காப்பு, மாலை மற்றும் கர்ப்பகாலம் குறித்த கையேடு உள்ளிட்டவைகளை வழங்கி அட்சதை போட்டு வாழ்த்தினார்…
பின்பு அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் 5 வகையான கலவை சாதம் பரிமாறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்காதாரிணி, மாவட்ட திட்ட அலுவலர் நித்யா, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காஞ்சனா, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.