முசிறி அருகே ரூ.1.12 கோடி பணம் பறிமுதல் : காவல்துறையினர் விசாரணை
திருச்சி, ஜூலை 14 திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொட்டியம் காவல் நிலையம் எதிரே பேருந்து நிறுத்ததில் நேற்று மாலை 6.30 மணியளவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் இரண்டு பேக்குகளுடன் ஒருவர் நின்று கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் அந்த நபரை தொட்டியம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது பையை திறந்து பார்த்தபோது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பையில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டு, கட்டாக இருப்பது தெரிய வந்தது. அதில் ஒரு கோடியே 12 லட்சத்து 48 , 200 ரூபாய் பணம் இருந்துள்ளது.
இதுகுறித்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை செய்த போது திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுக்கா கன்னிகா காவேரி தெருவை சேர்ந்த கோபிநாத் (52) என்பதும் டியூப் மற்றும் பிளைவுட் கடை நடத்தி வருவதும் விசாரணையில் தெரிய வந்தது. பணம் எங்கிருந்து கொண்டு வந்தார். பணம் எப்படி வந்தது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இது குறித்து திருச்சி வருமான வரித்துறையினருக்கு தொட்டியம் போலீசார் தகவல் கொடுத்தனர். பின்னர் திருச்சியில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் கோபிநாத்தை பணத்துடன் திருச்சிக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்
கொண்டுள்ளனர்.
தொட்டியத்தில் பிடிபட்ட பணம் கணக்கில் வராத பணமா அல்லது ஹவாலா பணமா என்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொட்டியம் பேருந்து நிறுத்தத்தில் கட்டு, கட்டாக பணம் பிடிப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.