திருச்சியில் சுதந்திர தினவிழா : மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றினார்
திருச்சி, ஆக.15 இந்திய திருநாட்டின் 79வது சுதந்திரதினமான இன்று, சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தேசியக்
கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். வெற்றியினை வானில் பறக்கவிடும்வகையில் வண்ண பலூன்களையும், சமாதானத்திற்காக வெண்புறாக்களையும் வானில் பறக்கவிட்டார். தொடர்ந்து காவல்துறையின் மிடுக்கான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்தாருக்கு கௌரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து கௌரவித்தார்.
மேலும் பல்வேறு அரசுத்துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த 329 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 10 பயனாளிகளுக்கு 18.15லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திரதினவிழா கொண்டாட்ட நிகழ்வுகளை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்