திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
உத்தரபிரதேசத்தில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார்களை ஏற்றியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் 8 விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமை தாங்கினார்.
இதில், ஜனநாயக சமூக நீதி கூட்டமைப்பு தலைவர் சம்சுதீன், மக்கள் கலை இலக்கிய கழக மாவட்ட செயலாளர் ஜீவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில விவசாய சங்க துணை செயலாளர் இந்திரஜித், சுரேஷ், சிவா, சமூக நீதிப் பேரவை மாவட்ட செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து பல் வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.