வாலிபரை தாக்கிய மனைவியின் கள்ளக்காதலன் – நண்பருடன் கைது
திருச்சி அக். 27 கரூர் மாவட்டம் குளித்தலை காவக்காரன் பட்டி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 32). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கணவரை பிரிந்து திருச்சி உய்யக்கொண்டான் திருமலை வடக்கு தெரு பகுதியில் அவர் தனியாக வசித்து வந்தார்
இந்நிலையில் பத்மநாபன் மனைவிக்கும் புதுக்கோட்டை சக்தி நகர் சொக்கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (வயது 27) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக் காதலியை பார்ப்பதற்காக யுவராஜ் தனது நண்பர் ராஜேஷ் உடன் திருச்சி வந்துள்ளார். அப்போது பத்மநாபன் தனது மனைவியை பார்க்க திருச்சி வந்தார்.
அப்போது பத்மநாபனுக்கும் யுவராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த யுவராஜ் அவரது நண்பர் ராஜேஷ், மனைவி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அவரை ஹெல்மெட்டால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் பத்மநாபனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பத்மநாபன் கொடுத்த புகாரின் பேரில் யுவராஜ், ராஜேஷ் ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். பத்மநாபன் மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே பத்மநாபன் தன்னை தாக்கியதாக அவரது மனைவியும் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன் பேரில் பத்மநாபன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.