இறந்தவர் உடலை வாங்க மறுத்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
திருச்சி, நவ.4 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வன் என்பவரிடம் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து முத்துச்செல்வன் அடிக்கடி அந்தக் கடனை திருப்பிச் செலுத்துமாறு ராஜாவிடம் வற்புறுத்தி வந்ததாகவும் தகவல். நேற்று காலை ராஜாவின் மகன் சுரேஷ் மளிகைக் கடைக்கு சென்றபோது, முத்துச்செல்வன் மீண்டும் கடன் தொகையை கேட்டு, தகாத வார்த்தைகளால் அவமதித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுரேஷ் வீட்டிற்கு திரும்பி, தாயிடம் சம்பவத்தை கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக, சுரேஷின் உறவினர்கள் கடும் அதிருப்தியுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, உடலை எடுத்துச் செல்ல மறுப்பு தெரிவித்தனர்.
“முத்துச்செல்வன் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்” எனக் கோரிய அவர்கள், நீதிக்காக காவல் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் வட்டாட்சியர் சிவகுமார், தா.பேட்டை காவல் ஆய்வாளர் வீரமணி பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.