தா.பேட்டை அருகே மகளிர் சுகாதார வளாகம் திறப்பு
திருச்சி, டிச.6 திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே கரிகாலி ஊராட்சியை சேர்ந்த உத்தண்டம்பட்டி கிராமத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பின்றி இருந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று 15 வது நிதி குழு மானிய நிதியில் மகளிர் சுகாதார வளாகம் பராமரிக்கப்பட்டு புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து உலக கழிவறை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய திட்ட ஆணையர் குணசேகரன் மகளிர் சுகாதார வளாகத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அப்போது திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது குறித்தும், கழிவறை பயன்பாட்டின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் குமார், வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் வடிவேல், ஊக்குநர் சரளா மற்றும் மகளிர் குழுவினர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.