பஞ்சப்பூர் காய்கறி மார்க்கெட் கட்டுமான பணிக்கு பத்திரங்கள் மூலம் ரூ.100 கோடி திரட்டல் : மாநகராட்சி ஆணையர் தகவல்
திருச்சி பிப் 6 – திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருச்சி மாநகராட்சி வார்டு எண்.62 பஞ்சப்பூரில் 22.10 ஏக்கர் பரப்பளவில் ரூ.236.00 கோடி மதிப்பீட்டில், பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி கட்டும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த 9.05.2025ம் தேதியன்று அடிக்கல் நாட்டப்பட்டு திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது.
இத்திட்டப்பணிக்கான நிதியாதாரங்களான உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி (I& ஏ) நிதி ரூ.120.00 கோடி, முனிசிபல் பத்திரம் ரூ.100.00 கோடி, மூலதன மான்ய நிதி ரூ.8.00 கோடி மற்றும் மாநகராட்சி பொது நிதி ரூ.8.00 கோடி ஆகிய நிதியாதாரங்களின் படி இத்திட்டப்பணி நடைபெற்று வருகிறது.
முனிசிபல் பத்திரங்கள் வாயிலாக ரூ.100 கோடி நிதி திரட்டுவதற்கு மும்பை பங்கு சந்தை வாயிலாக பத்திரங்கள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் மூன்று முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டதில், ரூ.100 கோடி இம்மாநகராட்சிக்கு வரப்பெற்றுள்ளது. இதன் வாயிலாக மேற்கண்ட திட்டப்பணி விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .
இவ்வாறு அந்த அறிக்கையில் ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.