ஆற்றுப் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி: திருச்சி மாவட்ட த.வெ.க. பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் மீது குற்றச்சாட்டு
திருச்சி, மே 20 ஆற்றுப்புறம் போக்கு இடத்தை ஆக்கிரமிக்க முயன்றவரும் திருச்சி மாவட்ட த.வெ.க. பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி குடமுருட்டி செக்போஸ்ட் அருகே வசித்து வரும் கீதா என்ற பெண் தனது நிலம் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கான சாலை ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்..
எனது கணவர் BHEL நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாங்கள் இப்பகுதியில் 8,500 சதுர அடி நிலம் வாங்கியிருந்தோம். கடந்த 2002-ஆம் ஆண்டிலேயே இதற்கான லே-அவுட் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், ஏற்கனவே எங்கள் நிலத்தின் ஒரு பகுதியில் 1,000 சதுர அடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. இது தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளோம். இந்த லே-அவுட் வரைபடத்தின்படி பொதுப் பயன்பாட்டிற்கான சாலையாக ஒதுக்கப்பட்ட இடத்தை, எந்தவொரு சட்டப்பூர்வ ஆவணங்களும் இன்றி, தமிழக வெற்றிக்கழக கட்சியின் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் என்பவர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து, அங்கே செட் அமைத்துக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆக்கிரமிப்பு மட்டுமின்றி, அந்த இடத்திற்குப் பின்னால் உள்ள நதியில் டிரைனேஜ் கட்டி கழிப்பறை மற்றும் இதர கழிவுநீரை நேரடியாகக் கொட்டி ஆற்றை மாசுபடுத்தும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து நாங்கள் ஆதாரங்களைச் சேகரிக்க முயன்றபோது, எங்களது செல்போனைப் பறித்துச் சென்றனர். பின்னர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தே செல்போனை திரும்பப் பெற்றோம். இது தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவு (CM Cell) மற்றும் குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளோம். நீதிமன்ற விடுமுறை முடிந்து அடுத்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதற்குள் அவசர அவசரமாக இந்த ஆக்கிரமிப்புப் பணிகள் நடக்கின்றன. இது குறித்துச் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்கள் முன்னிலையிலேயே எங்களை ஆபாச வார்த்தைகளால் பேசி மிரட்டுகின்றனர். இது போன்ற உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் அத்துமீறல்களால் பொதுமக்கள் அச்சத்தில் வாழும் சூழல் நிலவுவதாகவும், நதி நீர் பாதுகாப்பு மற்றும் நில ஆக்கிரமிப்புத் தடுப்புப் பிரிவினர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தங்களுக்கு உரியத் தீர்வையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
இதனைத் தொடர்ந்து… செய்தியாளர்கள் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போதே அங்கு வந்த தமிழக வெற்றிக்கழக கட்சியின் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் பேட்டி கொடுத்த பெண்மணியை தரக்குறைவாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
TVK கட்சியினர் மீது இதுவரை நில அபகரிப்பு புகார் மட்டும் இல்லாமல் இருந்தது இப்போது அதுவும் வந்துவிட்டது
தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே கட்சி நிர்வாகிகள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட தொடங்கி உள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பேட்டி அளித்தவர்: பாதிக்கப்பட்ட திருமாவளவன்