ஹோட்டல் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு : சிசிடிவி ஆதாரங்களை வெளிடக்கோரி உறவினர்கள் மறியல்
திருச்சி, ஜூலை 4 திருச்சியில் ஹோட்டல் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த துப்புரவு ஊழியர்: சிசிடிவி ஆதாரங்களை வெளியிடக்கோரி உறவினர்கள் சாலை மறியல்.
திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (43). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டல் (குரு ஹோட்டல்) ஒன்றில் துப்புரவு ஊழியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 28-ம் தேதி பணியில் இருந்தபோது, நாகராஜ் திடீரென கீழே விழுந்ததில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாகராஜின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குற்றம் சாட்டிய அவரது உறவினர்கள், ஹோட்டலில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி அரசு மருத்துவமனை முன்பு இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டோன்மென்ட் காவல்துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த விவகாரம் குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததையடுத்து, அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து உயிரிழந்த நாகராஜின் சகோதரி செல்லம்மாள் கூறுகையில், எனது அண்ணன் இறப்பில் மர்மம் உள்ளது. ஹோட்டல் நிர்வாகத்தினர் அவரைத் தாக்கியதால்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம். எனவே சிசிடிவி ஆதாரங்களைக் கைப்பற்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.