காஜாமலை ஆர்.எஸ்.புரம் பூங்காவில் பராமரிப்பின்றி கருகிய மரக்கன்றுகள் : தண்ணீர் அமைப்பு வேதனை
திருச்சி, ஆக.12 திருச்சி காஜாமலை அருகே உள்ள ஆர்.எஸ்.புரம் வனத்துறைக்கு சொந்தமான பூங்காவில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்படாத நிலையில், அவற்றுக்கு முறையான பராமரிப்பும் தண்ணீரும் வழங்கப்படாமல் காய்ந்து கருகி வீணாகியுள்ள சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பூங்காவில் வைக்கப்பட்டுள்ள ஏராளமான மரக்கன்றுகள் தற்போது வாடி கருகிய நிலையில் இருப்பது பொதுமக்களின் கவலையில் வேதனை அடைந்தார்கள்.
மரங்களை வளர்க்கும் தன்னார்வலர்கள் பலர் மரக்கன்றுகள் கிடைக்காமல், அதிக செலவு செய்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மரக்கன்றுகளை வாங்கி வந்து, தங்களது சொந்த முயற்சியில் நட்டு தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பொது நிதியில் வாங்கப்பட்டு நடப்படாத மரக்கன்றுகள் முறையான பராமரிப்பின்றி கருகி வீணாவது மிகவும் வேதனைக்குரியதும் கண்டனத்திற்குரியதுமாகும் என தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் தெரிவித்துள்ளது.
தண்ணீர் அமைப்பு சார்பில் கே.சி.நீலமேகம் கூறுகையில், “ஒரு மரக்கன்றை நடுவது மட்டுமே போதாது; அது மரமாகும் வரை தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பாதுகாப்பது அவசியம். பலர் மரக்கன்றுகளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இவ்வாறு கருகி வீணாகியிருப்பது வேதனை அளிக்கிறது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் வாங்கும் ஒவ்வொரு மரக்கன்றும் முறையாக நட்டு பராமரிக்கப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தினர்.
“மரக்கன்று நடுவது மட்டும் அல்ல; மரமாகும் வரை காப்பதே உண்மையான சுற்றுச்சூழல் பணியாகும்” எனவும் அவர்கள் தெரிவித்தனர்.