வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி : மாவட்ட ஆட்சியர்
திருச்சி, செப்.10 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
புதிய தொழில் முனைவோர், மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தொழல்தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கி கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதில், திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை தமிழக அரசு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீதம் மானியம் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவீதம் மானியமாகவும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் எனில் 45 வயதிற்குள்ளும், பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிறபடுத்தப்பட்டோர், மிகவும் பிறபடுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் எனில் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஏற்கனவே, மத்திய, மாநில அரசுதிட்டங்களின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவர்கள் கடனுதவிபெற இயலாது. விவசாயம் தவிர்த்து, ஏனைய உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். எனவே, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தமுதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை சமர்ப்பித்து, அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளருக்கு அனுப்ப வேண்டும். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் தாயள் தெரிவித்துள்ளார்.