முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருச்சி, செப். 9 திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தொடங்கி வைத்தார்
திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள், இன்று (09.09.2026) தொடங்கி வைத்து, பார்வையிட்டு விளையாட்டு வீரர்களிடம் கலந்துரையாடினார்கள்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 09.09.2026 முதல் 27.09.2026 நடைபெறவுள்ளது. இதில் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 வகை பிரிவினர்களுக்கு மாவட்ட அளவில் தடகளம், கபாடி, இறகுபந்து, வாலிபால், சிலம்பம், சதுரங்கம், கிரிக்கெட், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், மேசைபந்து, கோ-கோ, பால் பேட்மின்டன், சிறப்பு கையுந்துபந்து, வீல்சேர் டேபிள் டென்னிஸ் மற்றும் எறிபந்து, யோகாசனம், ஸ்பீடுஸ்கேட்டிங் ஆகிய போட்டிகள் 09.09.2026 முதல் 27.09.2026 வரை அண்ணா விளையாட்டரங்கம், ஜெ.ஜெ.பொறியியல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, தந்தை பெரியார் அரசுக் கல்லூரி மற்றும் ஸ்டெம் பார்க் எதிரில் உள்ள ஹெலிபேட் மைதானம் ஆகிய இங்களில் நடைபெறவுள்ளது.
இவ்விளையாட்டுப் போட்டிகளில் 5 பிரிவுகளிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 11,98,38 நபர்கள் தங்களது பதிவுகளை இணையதளம் மூலம் மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.3000/-மும், இரண்டாம் பரிசாக தலா ரூ.2000/-மும், மூன்றாம் பரிசாக தலா ரூ.1000/-மும் அவரவர் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணப்பரிவர்த்தனை மூலம் பரிசுத்தொகை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திலிருந்து வழங்கப்படும்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞான சுகந்தி, மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்குமார், விளையாட்டு விடுதியின் மேலாளர் கண்ணன், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.