விநாயகர் சிலை ஊர்வலம் : திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம் – மாவட்ட ஆட்சியர் தகவல்
திருச்சி மாநகரத்தில் விநாயகர் சிலை “ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வருகின்ற 16.09.2026 மாலை 6.00 மணி முதல் மறுநாள் 17.09.2026-ந் தேதி காலை 6.00 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளார்கள்.
- நகரப் பேருந்துகள் நம்பர் ஒன் டோல்கேட் வழித்தடம்:
நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து வரும் அனைத்து நகரப் பேருந்துகளும் மாம்பழச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு, வலதுபுறமாக அம்மா மண்டபம் வழியாகச் சென்று ஸ்ரீரீரங்கம் பெரிய கோபுரம் -திருவானைக்காவல் வழியாக, மீண்டும் தங்களது வழித்தடத்தில் செல்ல வேண்டிய ஊர்களுக்கு இயக்கப்பட வேண்டும்.
- மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் நகரப் பேருந்துகள்:
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வரும் அனைத்து நகரப் பேருந்துகளும் சத்திரம் பேருந்து நிலையத்துடன் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.
- புறநகர் பேருந்துகள் டிவிஎஸ் டோல்கேட் வழித்தடம்:
துறையூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் இருந்து வரும் அனைத்து புறநகர் பேருந்துகளும் புறவழிச்சாலை வழியாக பால்பண்ணை டிவிஎஸ் டோல்கேட் சென்று, பழைய மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைய வேண்டும். அங்கிருந்து மீண்டும் தங்களது வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும். அண்ணாசிலை முதல் ஓடத்துறை, சஞ்சீவி நகர் வழியாகவும், மாம்பழச்சாலையில் இருந்து அண்ணாசிலை வழியாகவும் எந்தவிதமான வாகன போக்குவரத்திற்கும் அனுமதியில்லை.
திருவெறும்பூரிலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் அனைத்து நகர பேருந்துகளும் தேவைப்பட்டால் மாலை 06.00 மணிக்குமேல் TVS Tollgate, HPO வழியாக மத்திய பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும்.
பஞ்சப்பூர் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பாலக்கரை வழியாக செல்லும் அனைத்து நகர பேருந்துகளும் மாலை 06.00 மணிக்குமேல் HPO, பாலக்கரை, வழியாக செல்லக்கூடாது அதற்கு பதிலாக MGR சிலை, Student Road, Sasthri Road மார்க்கமாக செல்ல வேண்டும்.
