காவிரி ஆற்றில் மூழ்கிய ஐ.டி.ஐ. மாணவர்: தீயணைப்பு வீரர்கள் தீவிர தேடுதல்
திருச்சி, செப்.19, திருச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய ஐ.டி.ஐ. மாணவர் கதி என்ன?
தீயணைப்பு வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை
திருச்சி அருகே காவிரி ஆற்றில் கம்பரசம்பேட்டை தடுப்பணையில் குளிக்க சென்ற ஐ.டி.ஐ. மாணவர் தண்ணீரில் மூழ்கி மாயமானார். அவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
திருச்சி கல்லுக்குழி சுப்பராய தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார். ஆட்டோ டிரைவர். இவரது மகன் பார்த்தசாரதி (வயது 17). இவர் திருவெறும்பூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார். நேற்று காலை ஐ.டி.ஐ.க்கு சென்ற பார்த்தசாரதி, மதியம் தனது நண்பர்கள் 3 பேருடன் காவிரி ஆற்றில் குளிக்க திருச்சி அருகே உள்ள கம்பரசம்பேட்டை தடுப்பணைக்கு சென்றார்.
அங்கு பார்த்தசாரதி உள்பட 3பேர் தடுப்பணை மேல் பகுதியில் இருந்து ஆற்றில் குதித்துள்ளனர். அப்போது, தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், அவர்கள் 3 பேரும்தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் 2 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் பார்த்தசாரதி தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் ஆற்றுகுள் சென்று பார்த்தசாரதியை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. அவர் கதிஎன்னவென்றுதெரியாததால் பெற்றோர் கதறி அழுவது பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இந்த பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. எனவே இப்பகுதியில் உள்ள தடுப்பு கம்பிகளை மேலும் உயர்த்தி அமைக்க வேண்டும். இங்கு குளிக்கக் கூடாது என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்’ என்றனர்.
இந்த நிலையில் இரவு 7 மணி வரை தேடிப்பார்த்தும் மாணவர் கிடைக்கவில்லை. இதனால் தீயணைப்பு வீரர்கள் மீண்டும் இன்று (சனிக்கிழமை) காலை மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.