திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் 90 சதவீதத்துக்கும் மேல் நிரம்பி உள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.
தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மழை/வெள்ளம் நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்கக்கூடாது. வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பொதுமக்கள் தங்களது ஆதார்/ரேஷன்கார்டு உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். நீர்வீழ்ச்சிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம்.
பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டி, ஒருவார காலத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்(உணவு வகைகள்), கியாஸ் சிலிண்டர் மற்றும் மண்எண்ணெய், மருந்து மற்றும் பால்பவுடர், மின்விளக்குகள் மற்றும் உபரி பேட்டரிகள், சுகாதாரத்தை பேணிக்காக்க தேவையான பொருட்கள், முககவசங்கள் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.