மணப்பாறை அருகே உற்சாகத்துடன் நடைபெற்ற மீன்பிடி திருவிழா
திருச்சி, செப்.1 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கண்ணூத்து ஏரியில் நீர் மட்டம் குறைந்து தற்போது குறைந்த அளவே தண்ணீர் உள்ள நிலையில் மீன்பிடி விழா இன்று நடைபெற்றது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது அருகில் உள்ள திண்டுக்கல், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்கள் மூலம் சாரை சாரையாக வந்து குளத்தில் குவிய தொடங்கினர். அதனைத் தொடர்ந்து வலை, கச்சா, கூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் குளத்தில் இறங்கி போட்டி போட்டு மீன்களை பிடிக்க துவங்கினர். நாட்டு ஜிலேபி, கெண்டை, விரால், குறவை உள்ளிட்ட நாட்டு வகை மீன்களை பிடித்துச் சென்றனர்.
இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் போதிய அளவில் மீன்கள் கிடைத்தது. இதனால் மீன்பிடி திருவிழாவிற்கு வந்த அனைவரும் சந்தோசத்துடன் மீன்களை எடுத்துச் சென்றனர். மீன்பிடி திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.