ஏசி மெஷினுக்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பு

0 270
Stalin trichy visit

திருச்சி, மே 22  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை வ.உ.சி நகரில் தனியார் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வீட்டில் பொருத்தப்பட்ட ஏசி மெஷினுக்குள் புகுந்த 4 அடி நீளமுள்ள கட்டுவிரியன்  பாம்பை   தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.

திருச்சி  மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரையில் உள்ள வ. உ. சி. நகரைச் சேர்ந்தவர் ரோஸி. இவர் லால்குடி திருவள்ளுவர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் சொந்த தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களது வீட்டின் படுக்கை அறையில் ஏசி மெஷின் பொருத்தப்பட்டுள்ளது.மேலும் அறையில் இருந்த ஜன்னலை திறந்து வைத்துள்ளனர். ஜன்னல் வழியாக வீட்டிற்குள் வந்த பாம்பு ஏசி மெஷினில் பதுங்கிக் கொண்டது .இந்நிலையில் அங்குள்ள ஏசி மெஷினில் ஒரு வால் தொங்குவதை ரோசி கவனித்துள்ளார். அந்த வால் எலியாக இருக்கலாம் என கருதி அருகில் சென்று பார்த்துள்ளார் ரோசி. அப்போது அது பாம்பின் வால் என தெரிந்ததும் குடும்பத்தினர் அனைவரும் பயத்தில் தெறித்து வெளியே ஓடி வந்தனர்.

இது குறித்து லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு ரோஸி தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த லால்குடி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் பிரபு தலைமையில் வீரர்கள் ராஜா, சசிகுமார், சாகுல் ஹமீது, பிரபு, அருண்பாண்டியன், விஜய், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏசி மெஷினில் பதுங்கிக் கொண்டிருந்த கொடிய விஷம் கொண்ட 4 அடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பை சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பின் பாம்பை உயிருடன் மீட்டு அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் விடுவித்தனர். பாம்பை பிடித்து விட்டதால் பயத்தில் உறைந்திருந்த ரோசி குடும்பத்தினர் நிம்மதி அடைந்து வீட்டிற்குள் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.