பேருந்தின் படியில் பயணம் செய்த மாணவனின் கால் சாலையில் சிக்கி படுகாயம்
திருச்சி, ஆக.19 திருச்சி அருகே கூட்டநெரிசல் காரணமாக பேருந்தின் படியில் பயணம் செய்த மாணவனின் கால் சாலையில் சிக்கி படுகாயம்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் இவரது மகன் 14 வயதுடைய ஷர்மா. ஷர்மா லால்குடி அருகே உள்ள காட்டூர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்குச் செல்வதற்காக இன்று காலை ஷர்மா அரசு நகரப் பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் பேருந்தின் படியில் மாணவன் சர்மா நின்று பயணித்துக் கொண்டிருந்தார்.
சற்று தூரம் சென்றதும் சாலையில் இருந்த வேகத்தடையில் பேருந்து ஏறி இறங்கியபோது படியில் நின்ற சர்மாவின் கால் சாலைக்கும் பேருந்தின் படிகட்டுக்கும் இடையே சிக்கி சிதந்து காயமடைந்தது.
இதனால் வழியில் அலறி துடித்த மாணவன் சர்மாவை சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்,
எங்கள் மேட்டுப்பட்டி கிராமம் வழியாக தினம்தோறும் இரண்டு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் செல்லும் இரண்டு பேருந்திலும் தினமும் அதிக அளவில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வெளியூருக்கு வேலைக்கு செல்பவர்கள் முதல் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றோம். மேலும் கூட்ட நெரிசலில் பயணிக்க முடியாமல் படியில் நின்று பயணம் செய்யும் அவல நிலை தினந்தோறும் எங்களுக்கு அறங்கேறி வருகிறது என வேதனையுடன் தெரிவித்தனர். காலை மற்றும் மாலை வேளையில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .