மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட காய்கறி வியாபாரி.

0 295
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே முசிறி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்வேலியில் காய்கறி வியாபாரி மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மண்ணச்சநல்லூர் அருகே முசிறி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்வேலி தெற்கு தெருவை சேர்ந்தவர் 51 வயதான முருகேசன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு முசிறியில் உள்ள கனரா வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு உள்ளது.கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இவரது வங்கி கணக்கில் ரூ. 2 லட்சம் பணம் வரவு வந்துள்ளது. இந்த வங்கி கணக்கிற்கு யாரோ ஒருவர் தவறுதலாக பணம் அனுப்பி உள்ளார். பணம் எங்கிருந்து வந்தது என தெரியாத முருகேசன் அந்தப் பணத்தை சிறுக சிறுக எடுத்து செலவு செய்துள்ளார். நீண்ட நாள் தேடுதலுக்குப் பின் பணம் அனுப்பியவர்கள் முசிறியில் உள்ள கனரா வங்கிக்கு சென்றதை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து வங்கி மேலாளரிடம் பணம் அனுப்பியவர்கள் புகார் அளித்தனர்.அதன் அடிப்படையில் வங்கி மேலாளர் முருகேசன் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது அதில் 2 லட்சம் வரவு வந்தது தெரிய வந்தது. வங்கி மேலாளர் முருகேசனை தொடர்பு கொண்டு விசாரணைக்காக அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பணத்தை திரும்ப செலுத்துமாறு வங்கி மேலாளர் கூறியுள்ளார். பணத்தை திரும்ப செலுத்தக் கூறியதால் என்ன செய்வதென்று பணமில்லாமல் தவித்த முருகேசன் கடந்த இரண்டு நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனையடுத்து நேற்று மாலை அங்குள்ள வயல் பகுதியில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதைக் கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.