முசிறியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
திருச்சி, ஜூன் 26 திருச்சி மாவட்டம், முசிறியில் பள்ளிக்கல்வித்துறை, சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பணியகம் இணைந்து போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணியை பள்ளி தலைமையாசிரியர் பல்த்தசார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் செல்லத்துரை முன்னிலை வகித்தனர். மாணவர்கள் இடையே போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், அதனால் குடும்பத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்து மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கதிரவன் பேசினார். பேரணி முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
மாணவர்கள் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களை மக்களிடையே வழங்கியும் கோஷங்கள் எழுப்பியும் சென்றனர். பேரணி புதிய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.
இதில் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை முசிறி போலீசார் செய்திருந்தனர்.