பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் : அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை
திருச்சி, மே 31 பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் என்று அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.
திருச்சி ரோட்டரி சங்கம் மற்றும் ஹேக்கர்ஸ் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த போதை பழக்கத்திற்கு எதிரான ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியானது திருச்சியில் துவங்கி சென்னையில் நிறைவடைகிறது. மேலும் இந்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியில் மூன்றரை வயது முதல் 28 வயது வரை உள்ள 70 ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த 3-நாள் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், செங்கல்பட்டு, அம்பத்தூர் வழியாக சென்று சென்னையில் நிறைவடைகிறது.
இந்நிகழ்ச்சிக்கு பின் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…
போதை பழக்கத்திற்கு எதிரான இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் கவனமுடனும், பாதுகாப்பாகவும் திருச்சியில் இருந்து சென்னை சென்று இந்த விழிப்புணர்வு பேரணியை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், திருச்சி மாவட்டத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அரசு அதிகாரி ஒருவர் பொது மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணம் கேட்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
இதன் மூலம் அரசு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அது என்னவென்றால் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் குறைகளை கோரிக்கைகளை அளிக்க வருகின்றனர். இப்படி வரும் பொது மக்களை உட்கார வைத்து அவர்களிடம் அன்பாக பேசி அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து புரிந்து கொள்ளுங்கள் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள் அரசு அலுவலர்களாகிய உங்களுக்கும் நிறைய வேலைப்பளுக்கள் இருக்கும் ஆனால் வருகின்ற பொது மக்களிடம் அவர்களுக்கு உண்டான பதிலை நாம் தெளிவாக சொல்ல வேண்டும்.
இதன் மூலம் அரசு அலுவலர்கள் அனைவருக்கும் நான் தெரிவித்துக் கொள்வது பொது மக்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம். மேலும் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் அரசு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.