விவசாய நிலத்தில் இருந்த ஆயிரம் வாழை மரங்களை வெட்டி சாய்த்தவர்கள் மீது புகார்
திருச்சி மாவட்டம் காட்டுப் புத்தூர் அருகே உள்ள சீத்தப்பட்டியை சேர்ந்தவர் பூபதி(43) மற்றும் இவரது அண்ணன் செல்வகுமார்(45). இவர்கள் காட்டுப்புத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்த குருசாமி மனைவி சிவபாக்கியம் என்பவரது நிலத்தினை கடந்த 1998ம் ஆண்டு முதல் குத்தகைக்கு சாகுபடி செய்து வருவதாக பேசி அதற்கான தொகைகளை சிவபாக்கியம் மற்றும் அவரது மகன் பிரபு ஆகியோரிடம் கொடுத்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இதில் சிவபாக்கியம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில் பூபதி மற்றும் இவரது அண்ணன் செல்வகுமார் இருவரும் தங்களது நிலத்தை வைத்துக்கொண்டு நாங்கள் கொடுத்த பணத்தினை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அப்போது பிரபு அவரது மைத்துனர் பிரகாஷ் ஆகியோர் தங்களிடம் பணம் இல்லை நீங்களே விவசாயம் செய்யுங்கள் என்று கூறியதாகவும், தற்போது பிரபு இவரது மைத்துனர் பிரகாஷ் மற்றும் சிலர் தங்களது நிலத்தை விடுமாறு கேட்டு தகராறு செய்ததாகவும் மேலும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி நாங்கள் விவசாயம் செய்து இருந்த ஆயிரம் வாழை மரங்களை அடியோடு வெட்டி சாய்த்து சேதப்படுத்தியதாகவும், சேதப்படுத்திய வாழை மரங்களில் மதிப்பு ரூ.1,30,000 எனவும் தனது வாழைகளை வெட்டி வீழ்த்திய பிரபு மற்றும் அவரது மைத்துனர் பிரகாஷ் மற்றும் தொட்டியதைச் சேர்ந்த விமல், காட்டுப்புத்தூரை சேர்ந்த பொன்னடி மகன் கதிர்வேல் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தனக்கு வரவேண்டிய தொகை மற்றும் சேதப்படுத்திய வாழை மரங்களுக்கு உரிய தொகையினை பெற்றுத்தருமாறு காட்டுப்புத்தூர் காவல்நிலையத்தில் பூபதி அளித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.