மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு பசுமாடு உயிரிழப்பு
திருச்சி, ஆக. 27 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு வடக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணி. பசு மாடுகளை வளர்த்து வரும் இவர் பால் கறந்து பன்னாங்கொம்பு பால் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கி வருகிறார்.
இந்நிலையில் மணி தனது வீட்டருகே மின்கம்பம் உள்ள நிலையில் அதன் அருகே தனது ஒரு சினைப்பசு மாட்டை கட்டி வைத்திருந்துள்ளார். அப்போது மின்கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு மின்கம்பத்தின் மீது மோதிய பசுவின் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. நள்ளிரவில் மணியின் மகன் மாட்டிற்கு தீணி போடுவதற்காகச் சென்றபோது மாடு கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து அதனை எழுப்ப முயன்றபோது மாட்டின் மீது மின்சாரம் பாய்வதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் அருகில் உள்ள சில மின்கம்பங்களிலும் இருந்து மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்துள்ளது. பின்னர் புத்தாநத்தம் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். மின்வாரி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின்சாரத்தை நிறுத்தி மின் கசிவு ஏற்படாத வகையில் பழுதை சரிசெய்தனர். இதனையடுத்து பசுவின் உடல் மீட்கப்பட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மணப்பாறை அருகே அடுத்தடுத்த மின்கம்பங்களில் மின்சாரம் பாய்ந்த நிலையில் மின்சாரம் தாக்கி பசு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.