இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரம் காட்டி வரும் திமுக
திருச்சி, ஏப்.16 லோக்சபா தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கரூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக நகர்மன்ற தலைவர் கீதாமைக்கேல்ராஜ் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திருச்சி சாலையில் உள்ள காந்தி சிலையில் இருந்து துவங்கி ராஜவீதி, விராலிமலை சாலை, கோவில்பட்டி சாலை, மஸ்தான் தெரு, பெரியார் சிலை, பேருந்து நிலையம், வழியாகச் சென்று அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே பேரணி முடிவடைந்தது. கரகாட்டம், தப்பாட்டத்துடன் பேரணியாகச் சென்ற கட்சியினர் பொதுமக்களிடையே கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினர். திமுகவினரின் பிரம்மாண்ட பேரணி வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.