திருச்சி கிழக்குத் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் : தெற்கு மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்
திருச்சி, மே 15 திருச்சி கிழக்குத் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் நேற்று (மே 14) காலை நடந்து முடிந்ததை தொடர்ந்து நேற்று மாலை திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
முக்கிய தீர்மானங்கள்:
தலைவருக்கு நன்றி: உதயநிதி ஸ்டாலின் அவர்களைச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததற்காகக் கழகத் தலைவருக்கு இந்தச் செயற்குழு நன்றி தெரிவிக்கிறது.
மகளிர் உரிமைத் தொகை: பெண்களுக்கான உரிமைத் தொகையை மே 15-ஆம் தேதி (நாளை) வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் உடனடியாக அதனை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
வாக்காளர்களுக்கு நன்றி: திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய மூன்று தொகுதிகளில் கழக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்குச் செயற்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
எதிர்க்கட்சித் தலைவருக்குப் பாராட்டு: சட்டமன்றத்தில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும், அளித்த வாக்குறுதிகள் (மகளிர் உரிமைத் தொகை ₹2500 ஆக உயர்வு, இலவசப் பேருந்து பயணம், 6 சிலிண்டர்கள் போன்றவை) குறித்தும் கேள்வி எழுப்பி, மக்கள் நம்பிக்கையைப் பெறும் வகையில் செயல்பட்ட எதிர்க்கட்சித் தலைவருக்குப் பாராட்டு மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்படுகிறது.
சிறப்பு தீர்மானமாக கழகத் தலைவர் மு க ஸ்டாலின் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என செயற்குழுவில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இக்கூட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன், மாநிலங்கள்ளவை உறுப்பினர் கவிஞர் சல்மா, தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ், மாநில அணி நிர்வாகி செந்தில் மற்றும் மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழகச் செயலாளர் அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .