தி.மு.க. பெண் கவுன்சிலர் வீடு சூறை சம்பவம் : மாநகராட்சி ஒப்பந்ததாரர் உள்பட 19 பேர் மீது வழக்கு

0 210
Stalin trichy visit

திருச்சி ஜூலை 18  திருச்சி மாநகராட்சி 64- வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதியில் சாக்கடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வேல்முருகன் என்ற ஒப்பந்தகாரர் இப்பணியினை மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில் 64-வது வார்டு திமுக கவுன்சிலர் மலர்விழி ராஜேந்திரன் சாக்கடை கட்டும் பணிகளை ஆய்வு செய்தபோது சாக்கடை, தனியார் இடத்தில் கட்டப்படுவதாகவும் பணிகளை உடனே நிறுத்துமாறும் கூறியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வேல்முருகன் மற்றும் அவரது ஆட்கள் மலர்விழியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க மலர்விழி சென்றார். நீண்ட நேரம் காத்திருந்தும் போலீசார் அவர் புகாரை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று ( ஜூலை 17) மாலை வேல்முருகன் தரப்பை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மலர்விழி ராஜேந்திரன் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனம், டிவி, ஏர்கூலர்களை அடித்து நொறுக்கியதுடன் மலர்விழி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.

போலீசாரின் மெத்தன போக்கை கண்டித்து கவுன்சிலர் மலர்விழி தரப்பினர் கே.கே. நகர் முதன்மை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த துணை ஆணையர் ஈஸ்வரன் மற்றும் கே.கே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக் காரர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் கே.கே. நகர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆளுங்கட்சி கவுன்சிலருக்கே பாதுகாப்பு இல்லை என்று மலர்விழி கண்ணீர் மல்க கூறினார்.

இந்த சம்பவம் குறித்து திமுக கவுன்சிலர் மலர்விழியின் உறவு பெண் நிவேதா என்பவர் கே.கே நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் மாநகராட்சி ஒப்பந்ததாரர் வேல்முருகன் மற்றும் அவருடைய தனியார் நிறுவனத்தின் சூப்பர்வைசர் பிரகாஷ் உள்ளிட்ட 19 பேர் மீது 7 க்கும் பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.