மாயனூர் கதவணையில் மீன்பிடி வலையில் சிக்கி மீனவர் உயிரிழப்பு
திருச்சி, ஜூலை 2 முசிறி அருகே மாயனூர் கதவனை பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவர் வலையில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் தாலுக்கா, சீலைப் பிள்ளையார்புத்தூர் மீனவர் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). இவருக்கு திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ராஜேந்திரன் தனது நண்பர் மாரியப்பன் என்பவருடன் மாயனூர் கதவணை பகுதியில் காவிரி ஆற்று மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ராஜேந்திரன் ஆற்றில் இறங்கி ஐந்தாவது ஷட்டர் அருகே வலை வீசி உள்ளார்.
பின்னர் வலையை இழுக்கும்போது எதிர்பாராத விதமாக வலைக்குள் ராஜேந்திரன் சிக்கிக் கொண்டதால் தண்ணீரில் தத்தளித்தவாறு நீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த உடன் வந்த மாரியப்பன் கிராமத்திற்கு சென்று தகவல் தெரிவித்து பொதுமக்களை அழைத்து வந்துள்ளார். பின்னர் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி தேடியபோது அருகில் இருந்த பாறையில் சிக்கி சடலமாக இருந்த ராஜேந்திரனை மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முசிறி அருகே மாயனூர் கதவணை காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மீன்வலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.