பிறந்த நாளில் பள்ளிக்கு 100 மரக்கன்றுகள் வழங்கிய அரசுப்பள்ளி மாணவி
திருச்சி, பிப். 9 பிறந்த நாளில் பள்ளிக்கு 100 மரக்கன்றுகள் வழங்கிய அரசுப்பள்ளி மாணவி
தா.பேட்டை அருகே உள்ள பைத்தம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவி, தனது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக்கு 100 மரக்கன்றுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
பைத்தம்பாறை கிராமத்தைச் சேர்ந்த வளையெடுப்பு ரமேஷ் – கவிதா தம்பதியினரின் மகள் மோஹித்ரா. இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கமாக பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடுவதற்குப் பதிலாக, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் அர்த்தமுள்ளதாகக் கொண்டாட மோஹித்ரா முடிவு செய்தார். அதன்படி, தனது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நடுவதற்காக சுமார் 100 மரக்கன்றுகளை பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மரக்கன்றுகளை பெற்றுக்கொண்ட தலைமை ஆசிரியர் பேசும்போது “செல்வத்தின் பயனே ஈதல் (கொடுத்தல்) தான். நாம் வாழும் இந்தச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நமது கடமை. மரங்கள் வளர்ப்பதன் மூலம் மட்டுமே வருங்காலத் தலைமுறைக்கு ஆரோக்கியமான காற்றை வழங்க முடியும்” பசுமை பிறந்தநாள் கொண்டாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவியின் இந்தச் சிறப்பான சமூகப் பங்களிப்பினை உதவித் தலைமை ஆசிரியர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள் சுரேஷ், ராஜா, பாலாஜி, விநாயகமூர்த்தி ஆகியோர் வெகுவாகப் பாராட்டினர்.
சிறு வயதிலேயே சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்ட மாணவி மோஹித்ராவின் இந்தச் செயல், மற்ற மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.